• Sun. Oct 19th, 2025

கலைஞர் விளையாட் டு உபகரணங்களை அனைத்து ஊராட்சிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Byமு.மு

Mar 1, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட் டு உபகரணங்களை அனைத்து ஊராட்சிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டத்தில் 18.02.2024 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, 29.02.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திலும், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 கிராம ஊராட்சிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 672 கலைஞர் விளையாட்டு உபகரணங்களின் தொகுப்பை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது,

“கலைஞருடைய நூற்றாண்டில், இன்னும் பெருமையாக கூறினால் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 526 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அனைவரையும் சந்திப்பதில் பெருமை அடைகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள 12620 கிராம பஞ்சாயத்துகளுக்கும் ரூபாய் 86 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை சென்ற வாரம் மதுரையில் தொடங்கி வைத்தோம். நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளுக்கும் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்களை விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கும் கொடுத்தோம்.,

இன்றைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளுக்கு கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கபாடி, சிலம்பம் உள்ளிட்ட 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட 672 கலைஞர் விளையாட்டு உபகரணங்களை உங்கள் கைகளில் ஒப்படைக்க இருக்கின்றோம். இதுவரை வழங்கிய மாவட்டங்களிலேயே நம்முடைய திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிக அளவிலான பஞ்சாயத்துகளுக்கு

அதிக அளவிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளோம். அந்த பெருமை இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு. இந்த திருவள்ளூர் மாவட்டம் ஏராளமான விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் வழங்கி உள்ளது.

இங்கே நிறைய சாதனையாளர்கள் வந்து உள்ளார்கள். மேடையில் கூட அமர வைத்து அழகு பார்த்திருக்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பி ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், எகிப்து நாட்டில் நடந்த ISSF World Championship போட்டியில் துப்பாக்கி சூடுதல் ஜுனியர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். இங்குள்ள அனைவரும் நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் தம்பி தனுஷ் இங்கு வருகை தந்திருக்கிறார். IWF World Championship போட்டியில் ஒரு வெள்ளி பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்று உள்ளார். அது மட்டுமல்ல கடந்த ஆண்டு நடந்த காமன் வெல்த் போட்டியிலும், தமிழ்நாடு அளவில் நடந்த போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பெருமை தேடி தந்துள்ளார்.

இவருடைய தொடர் முயற்சிகளால் தேசிய அளவில் நடந்த IWLF சீனியர் மற்றும் ஜூனியர் யூத் நேஷனல் வெயிட் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் அடிச்சிருக்கிறார். இன்றைக்கு கார்த்திக் சபரிராஜ், தனுஷ் அவர்களை மேடையில் அறிமுகபடுத்தி இருக்கிறோம் என்றால், இங்க இருக்கக்கூடிய ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் அவர்கள் தான் முன்உதாரணமாக உள்ளார்கள்.

சமீபத்தில் கூட கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்திக் காட்டினோம். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 38 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 39 வெண்கல பதக்கங்கள் என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதல் முறையாக பதக்க பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதில் ஒரு தங்கப் பதக்கம் தம்பி தனுஷ் அவர்கள் பெற்றதை பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். அடுத்த முறை இன்னும் முயற்சி எடுத்தால், இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு துறை எடுத்து வருகின்ற முயற்சிகளை பாராட்டி CII (Confederation of Indian Industries) என்ற மிக பிரபலமான அமைப்பு The Best State for Promoting Sports என்ற விருதை தமிழ்நாடு அரசுக்கும், துறைக்கும் வழங்கி

கௌரவித்தார்கள். அதே போல் மிக புகழ் பெற்ற ஆங்கில பத்திரிகை ‘தி இந்து’ வெளியிடும் “Sports Star” மீண்டும் The Best State for Promoting Sports என்ற விருதை தமிழ்நாட்டிற்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் நம்முடைய துறைக்கும் வழங்கினார்கள்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாற்றுத் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்ந்து நாங்கள் உதவிகளை செய்து வருகிறோம். இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ரூ 6 கோடி அளவுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக நிதி உதவி வழங்கி இருக்கிறோம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வெல்லுகின்ற நம்முடைய வீரர் வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத் தொகையினை வழங்கி வருகின்றோம். கடந்த வாரம் சாதனை படைத்த 650 வீரர்களுக்கு ரூ 16 கோடியே 24 லட்சம் உயரிய ஊக்கத் தொகையாக என்னால் வழங்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தொடர்ந்து தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள், ஸ்குவாஷ் உலகப் கோப்பை, வேர்ல்ட் சர்ஃபிங் லீக், சைக்கிளோத்தான், சென்னை செஸ் மாஸ்டர் 2023, தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி என தொடர்ந்து தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். இந்தியாவில் விளையாட்டு துறை அது தமிழ்நாடு தான் என்ற வகையில் தொடர்ந்து புதுப்புது முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதில் மிக மிக முக்கியமானது தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம்.

விளையாட்டுத் துறை வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டும் இருப்பது அல்ல. கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும். விளையாட்டு வீரர்கள் வர வேண்டும் என்பதற்காக தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கின்றோம். இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞருடைய பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும், ஆனாலும் நம்முடைய விளையாட்டுத் துறை சார்பாக முதல்முறையாக கலைஞர் பெயரால் விளையாட்டுத் துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் அவர்களுக்கு அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் விளையாட்டுக்கும் கலைஞருக்கும் என்ன தொடர்பு. ஏன் இத்திட்டத்திற்கு கலைஞர் அவருடைய பெயரை வைத்து உள்ளீர்கள் என சில பேர் கருதலாம். கலைஞர் அவர்கள் தன்னுடைய சிறு வயதிலேயே களத்தில் இறங்கி விளையாடியவர். அதன் பிறகு தான் அரசியலுக்கு வந்து ஆடுகளத்தில் விளையாடாமல் இருந்திருக்கலாம்.

இத்திட்டத்திற்கு ஆனால் அதையெல்லாம் விட அவருடைய பெயரை சூட்டியதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு. ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்கு வேண்டிய அத்தனை குணங்களும் திறமைகளும் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அது தான் அவருடைய சிறப்பு. ஒரு விளையாட்டு வீரருக்கு என்னென்ன திறமைகள் வேண்டும். நல்ல எனர்ஜி வேணும். நல்ல கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும். இதைவிட முக்கியம் நல்ல டீம் ஒர்க் வேணும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த திறமைகள் அனைத்தும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரிடம் பிறப்பிலேயே இருந்தது. கலைஞருடைய எனர்ஜிக்கு நிகரான எனர்ஜியை வேறொருவரோடும் ஒப்பிட்டும் பார்க்க முடியாது. இன்று இவ்வளவு நவீன போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள், தொலைதொடர்பு வசதிகள் எல்லாம் இப்போது இருக்கிறது. இந்த காலத்திலேயே ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு சோர்வு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அந்த காலத்தில் எந்த விதமான வசதிகளும் இல்லாமல், கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய ஒவ்வொரு கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் சென்று கட்சியை வளர்த்தார். மக்களை சந்தித்தார். மக்கள் பணி ஆற்றினார் என்றால், அவருக்கு எந்த அளவிற்கு எனர்ஜி இருக்கு வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

கலைஞர் அவர்களுக்கு இருக்கக் கூடிய கூர்மையான அறிவுத்திறன் மிக ஆச்சரியமானது. தான் என்ன சொல்ல போகிறோம். என்ன செய்ய போகிறோம். அதற்கு பதிலாக எதிரில் இருப்பவர் என்ன சொல்ல போகிறார்கள். என்ன செய்ய போகிறார்கள் அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்பதற்கு கலைஞருக்கு நிகர் கலைஞர் தான். அதேபோல் தான் ஒரு விளையாட்டு வீரருக்கும் அந்த திறமை தேவை. நாம் இப்படி விளையாடினால் நம்முடைய எதிர் அணியினர் எப்படி விளையாடுவார் என்று கணிக்க வேண்டும். அதற்கு ஏற்றப்படி நமது திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த கூர்மையான அறிவுத்திறன் இருந்தால் தான் விளையாட்டில் ஒவ்வொரு வீரனும் வெற்றி பெற முடியும்.

அடுத்து கலைஞருடைய மன திடம். வெற்றியாக இருந்தாலும் சரி. தோல்வியாக இருந்தாலும் சரி. கலைஞர் எப்போதும் ஒரே போல் தான் இருப்பார். அந்த திறனையும், மன திடத்தையும், தோல்வி அடைந்து விட்டோம் துவண்டு விடுவதோ, வெற்றி பெற்று விட்டோம் என்று அகங்காரத்தோடு இருக்கக் கூடாது. அந்த திறமையும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் மிக மிக முக்கியம்.

கலைஞருடைய டீம் வொர்க். ஒரு திறமையான அணி இருந்தால் தான், ஒரு திறமையான போட்டி நடக்கும். அதை நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும். ஒரு திறமையான வீரர்களை கொண்ட அணி அமைத்துக் கொண்டாலே பாதி வெற்றி அடைந்ததற்கு சமம். இப்படி ஒரு திறமையான விளையாட்டு வீரருக்கு இருக்கக்கூடிய அனைத்து குணங்களும், திறமைககளும் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அதனால் தான் யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கலைஞர் அவர்கள் இந்தியாவில் உயர்ந்து நின்றார்.

அத்தகைய கலைஞருடைய பெயரால் வழங்கப்படுகின்ற இந்த விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய இளைஞர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம் கலைஞர் அவர்களுக்கு இருந்த குணங்களையும், திறமைகளையும் நீங்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த குணங்களை நீங்களும் வளர்த்துக் கொண்டு பல்வேறு திறமைகளை சாதனைகளை வளர்க்க வேண்டும். வெற்றி என்பது சுலபமாக கிடைக்காது. கலைஞர் சொன்ன வார்த்தை தான். நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்று கலைஞர் சொல்வார்கள். எனவே, விளையாட்டுத் துறை மட்டுமல்ல நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எந்த துறையாக இருந்தாலும், துறைகளில் வெல்ல வேண்டுமென்றால் இன்று இளம் தலைமுறையினர் அதற்காக உழைக்க வேண்டும்.

கலைஞருடைய விளையாட்டு உபகரணங்களை பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்தனை ஊராட்சிகளையும், அத்தனை ஊராட்சிகளின் முகங்களாக உள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு வீரர் வீராங்கனைகளையும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் R.காந்தி அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.K.ஜெயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் S.சுதர்சனம், ச.மு.நாசர், A.கிருஷ்ணசாமி, T.J.கோவிந்தராஜன், V.G.இராஜேந்திரன், S.சந்திரன், துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி மேயர் G. உதயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.T.பிரபுசங்கர், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் J.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) /திட்ட அலுவலர் டாக்டர். N.O. சுகபுத்ரா,இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் K.V.G.உமா மகேஷ்வரி, சர்வதேச பளுதூக்கும் வீரர் தனுஷ், சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.