• Mon. Oct 20th, 2025

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை…முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

Byமு.மு

Mar 13, 2024
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை.

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. தண்டனையை மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது. விசாரணைக்கு எடுக்கும்போது குற்றவாளியா இல்லையா என்பது தெரியவரும். ஊழல் செய்தவர்கள் என்றைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

என்சிபி, ஜாபர் சாதிக்-இன் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்

போதை கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த விடியா திமுக அரசு கரும்புக்கரம் கொண்டு செயல்படுகிறது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வரும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் சென்னை இராயபுரத்தில் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சி மேடையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது,

தமிழ்நாட்டில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. இதனை, அதிமுக ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.அதன் வெளிப்பாடாகவே இன்று இராயபுரத்தில் தொண்டர்களும், பொதுமக்களும் மிக எழுச்சியோடு கழகத்தின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போதைப்பொருட்களை முழுமையாக ஒழித்து ஜனநாயகத்தை காக்க வேண்டும். இந்த விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதலே மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழல் இல்லை.

முதல்வர் மற்றும் அவர் குடும்பத்தில் முக்கிய பதவி வகிப்பவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் எடுத்த புகைப்படங்களை இன்று தமிழ்நாடு முழுவதும் பார்க்க முடிகிறது.2500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியதை என்சிபி துறை கண்டுபிடித்துள்ளது.இந்த வழக்கில் யார்,யார் இனி மாட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை.திமுகவில் உள்ள எல்லோரும் சிறைக்கு செல்லும் நிலை உருவாகும்.

ஜாபர் சாதிக் விவகாரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் பல இடங்களில் போதைப்பொருளை கைப்பற்றி கைது செய்யும் தமிழ்நாடு அரசு, அதற்கு முன்பு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டிருந்ததா..?

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து,கழகத்தின் எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு போன்றவைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விட்டது.இது போதாது என்று
மேலும் ஒரு இடியாக போதைப் பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக பட்டி தொட்டி எல்லாம் அதிகரித்து உள்ளது.இதனால் இளைஞர் சமுதாயம் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.இதில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்.

ஜாபர் சாதிக் டில்லியில் பிடிபட்டு என்சிபி-யின் வளையத்தில் இருக்கிறான்.அவனை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பார்கள்.‌
விசாரணையில் திமுகவிற்கும், அவனுக்குமான தொடர்பு வெளிவரும்.
ஸ்டாலின்,உதயநிதி,கனிமொழி ஆகியோருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படங்களை வலைத்தளங்களில் நானும் பார்த்தேன்.ஜாபர் சாதிக் உடன் அந்த குடும்பத்திற்க்கும்,திமுகவிற்கும் உள்ள தொடர்பு என்ன என்றும்,திமுகவின் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் யார் யார் எவ்வளவு பெற்றார்கள் என்றும் விசாரித்து தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தினால்,திமுகவிற்கு இரவு தூக்கமே போய் விட்டது.
என்சிபி-யை பொறுத்தவரை ஜாபர் சாதிக்-ன் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.‌திமுக அரசு, ஆட்சி பொறுப்பேற்ற இந்த 3 வருடத்தில் தன் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்து, சமுதாயம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறது.

போதைப்பொருள் விஷயத்தில் இளைஞர்களை,பொது மக்களை,மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றால் இது போன்ற போராட்டங்களின் வாயிலாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும்,ஆளும் வர்க்கத்தை சார்ந்த யாரெல்லாம் சாதிக் உடன் தொடர்பில் இருந்தார்களோ அவர்களை எல்லாம் விசாரணை செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதனால் கழக பொதுச் செயலாளர், அண்ணன் எடப்பாடியாரின் அறிவிப்பின் படி தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக ரீதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.‌ திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்துள்ளது.

சமீபத்தில் தான் இந்த போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 3 வருடமாக போதைப் பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது.திமுக அரசு இது எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தது எனவும், எங்கள் ஆட்சியில் குற்றம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினோம். ஆனால் இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் கரும்புக்கரம் காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பேசியதை சுட்டி காட்டி, ஜாபர் சாதிக் வழக்கை ஏன் சரியாக நடத்தவில்லை என்றும்,சிறிது நேரம் கழித்து அந்த வழக்கு என்சிபி போட்டது என்றும் கூறுகிறார் என்றால் ஒரு அமைச்சர் எந்த அளவுக்கு அறிவின்மையில் இருக்கிறார் என்பதும், நடந்தது என்னவென்று தெரியாமலேயே பேசியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.மேலும் அமைச்சர் ரகுபதியின் பேச்சில் பதட்டமும்,அச்சமும் தெரிகிறது. நிச்சயமாக மாட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

என்சிபிக்கும் அதிமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? 2013 ல் என்சிபி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2013 ல் மத்திய அரசுடன் திமுக தான் அங்கம் வகித்தது.
அப்போது அமைச்சரவை மூலம் என்சிபி-க்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே..? திமுக அதை சரியாக விசாரிக்காமல் அதிமுகவை குறை சொல்வதா…? குட்கா விவகாரத்திலும், குட்கா-வை தடை செய்தது அதிமுக அரசு.அந்த வழக்கை முறையாக விசாரிக்காதது திமுக.

ஜாபர் சாதிக் விவகாரம் பெரிதாகி விட்டது.இதை காரணமாக கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து விட வேண்டும் என்றும், இதற்கு காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலினால் சொல்ல முடியுமா? இதுவரை வாயை திறக்கவில்லையே? இப்போது கண் துடைப்புக்காக நாங்களும் வேலை செய்கிறோம் என்று காட்டிக் கொள்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் வரை இவர்கள் ஆட்சி இருந்தால் தமிழ்நாடு குட்டிச்சுவராகத் தான் போகும்.நிலைமை மோசமாக போகும் முன் இளைஞர் சமுதாயத்தையும் மாணவர் சமுதாயத்தையும் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தப்பட்டது குறித்து பேசியவர், உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லையே, தண்டனையை மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது.விசாரணைக்கு எடுக்கும்போது அவர் குற்றவாளியா இல்லையா என்பது தெரியும்.ஊழல் செய்தவர்கள் என்றைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இன்றைக்கு இடைக்கால தடை கிடைத்திருக்கலாம் ஆனால் அவருக்கு தலைக்கு மேல் ஒரு கத்தி எப்போதும் தொங்கி கொண்டு தான் இருக்கிறது.

போஸ்டர் ஓட்டுவது ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயம். முதல்வர் குடும்பத்தில் உள்ள ஸ்டாலின், உதயநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ மார்பிங் செய்யப்பட்ட போட்டோவா? அப்படி மார்பிங் பண்ணி போட்டால் அது குற்றம்.எதார்த்தத்தை தான் போட்டதாகவும்,அதுவும் அதிமுக தான் என்று தைரியமாக போட்டு ஒட்டுகிறோம் என்றும், திமுக கட்சிக்காரர்களை விட்டுவிட்டு போலீசை வைத்து அந்த போஸ்டரை கிழிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

காவல்துறைக்கு கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. காவல்துறை சட்ட ஒழுங்கை பராமரித்து மக்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும்.நேர்மையாக விசாரணைக்கு வருபவர்களை பாரபட்சம் பார்க்காமல் எது நியாயமோ அதை செய்ய வேண்டும்.

இந்த அரசு காவல்துறையை ஏவல் துறையாக இரண்டு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஒன்று எதிர்க்கட்சியான அதிமுக மீது பொய் வழக்குகள் போடுவது மற்றொன்று இவர்களை பற்றி போஸ்டர்கள் ஒட்டினால் அந்த போஸ்டர்களை கிழிப்பது.போதைப்பொருட்களை விட்டுவிட்டு போஸ்டர்களை தான் போலீஸ் பிடிக்கிறது.

நேற்று இராயபுரத்தில் போஸ்டர் ஒட்டிய நமது கட்சி தொண்டரை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். போஸ்டர் ஒட்டுவது எந்த விதத்தில் தவறு என்றும், சமூக வலைதளத்தில் வந்ததைத் தான் நாங்கள் போட்டிருக்கிறோம் என்றும் தான் கேட்டதாகவும்,எங்கள் கட்சிக்காரர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக உயர் நீதிமன்றம் சென்று உங்களை கூண்டில் நிறுத்துவோம் என்று தான் அந்த அதிகாரியிடம் சொன்னதாகவும் கூறினார்.
காவல்துறை அதிகாரிகள் நியாயமாக இருங்கள் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலையும் படி வைத்து கொள்ளாதீர்கள் என்பதை‌ எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து,கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தெளிவாக அறிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார். 2013இல் வாஜ்பாய் அரசாங்கத்தில் தான் இந்த குடியுரிமைச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு கூட்டணியில் இருந்த திமுக வாயில் வாழைப்பழத்தை வைத்திருந்தார்களா..? அப்போது வாயை மூடி இருந்தது நீங்கள் தான் அடிப்படையிலேயே நீங்கள் தான் தவறு செய்தீர்கள்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள்..? ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு ஸ்ரீலங்காவையும் சேர்த்து விட சொன்னார்களே தவிர CAA சட்டம் தேவை இல்லை என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் பத்திரங்கள் நாட்டில் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.எவ்வளவு கோடிக்கணக்கான ரூபாயை பிஜேபி,திமுக உட்பட பிற கட்சிகளுக்கு யாரெல்லாம் குடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிவர தான் போகிறது.அதிலிருந்து திசை திருப்ப தான் பிஜேபி சிஏஏ சட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்தார்.

எங்களின் பூர்வீக குடிமக்களாக இருக்கும் முஸ்லீம்களுக்கு முழுமையான பாதுகாப்பை அதிமுக எப்போதும் கொடுக்கும்.அதுவே எங்கள் நிலைப்பாடு.அந்த வகையில் நாட்டை பிளவுபடுத்த பிஜேபி நினைத்தால் அதிமுக அதை முழுமையாக எதிர்த்து போராடும். இஸ்லாமிய, சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்றும், CAA மற்றும் NRC போன்ற சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த விடமாட்டோம் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.