• Sun. Oct 19th, 2025

சென்னையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம்!.

Byமு.மு

Mar 14, 2024
சென்னையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம்

கடற்கரை பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி வீசி எறியப்படுவதை திறம்பட கண்காணித்து கட்டுப்படுத்த 2024 மார்ச் 13 அன்று சென்னை நீலாங்கரை கடற்கரையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம் தமிழ்நாடு அரசால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக சென்னை மாநகரத்தில் 5 மின்சார இரு சக்கர வாகனங்களை கொண்ட இரண்டாவது “மீண்டும் மஞ்சப்பை” படைப்பிரிவும் துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இம்முயற்சியானது, கடைகள், சந்தை இடங்கள் மற்றும் கடற்கரைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் திறம்படக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநில அளவிலான “மீண்டும் மஞ்சப்பை” என்ற மக்கள் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதலமைச்சர் அவர்களால் 2021 டிசம்பரில் துவக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு பிரச்சாரமானது மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சென்றடைந்துள்ளது. இவ்விழிப்புணர்வானது சுமார் 58,000 பள்ளிகளை சார்ந்த 60 லட்சம் பள்ளி மாணவர்களை சென்றடைந்துள்ளது.

14 வகையான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடைசெய்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையினை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசு முதன்மையானதாகும். இத்தடையினை அமல்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மாற்று பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கும், பல்வேறு முயற்சிகளை இவ்வரசு மேற்கொண்டு வருகிறது. “மீண்டும் மஞ்சப்பை” என்ற தலைப்பில் ஒரு மாநில அளவிலான பிரச்சாரம் 2021 டிசம்பரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் பிரச்சாரம்” என்ற பெயரில் பாரம்பரிய இயற்கை அடிப்படையிலான தீர்வுகளுடன் எதிர்காலத்திற்கு திரும்புவதற்கான அழைப்பு”

தொடங்கப்பட்டது. “மீண்டும் மஞ்சப்பை” இயக்கமானது பொது மக்களின் பழக்க வழக்கங்களை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களிடையே மாற்று பொருட்களின் பயன்பாட்டினையும் அதிகரித்துள்ளது.

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரம் துவங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் 115 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 670 டன் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தடையினை மீறுபவர்களிடமிருந்து ரூபாய் 8.3 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் மீதான தடையை திறம்பட செயல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 1.8 இலட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு துணிப்பைகள் கிடைப்பதை அதிகரிக்கவும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை வளாகங்கள், போக்குவரத்து மையங்கள், வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள், கல்வி நிறுவனங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது, மாநிலம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட முக்கியமான இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் முன்னோடி நடவடிக்கையாக, 30.10.2023 அன்று சென்னையில் உள்ள பெசன்ட்நகர் கடற்கரையில், கடற்கரை மாசு விழிப்புணர்வு நிலையம் திறக்கப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அதே வேளையில் பிளாஸ்டிக்கினால் கடல் மாசுபாடு குறித்த

தகவல்களையும் இந்த நிலையம் வழங்கும். இந்நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம், பிளாஸ்டிக் குவளைகளை நசுக்கும் இயந்திரம், அத்துடன் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் அவற்றின் மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை விவரிக்கும் காணொளி காட்சிகள் மற்றும் அச்சிடப்பட்ட பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையம் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கான ஒரு மையமாக உருவாகியுள்ளது. குறிப்பாக மஞ்சப்பை விழிப்புணர்வு மையம் ஏற்பாடு செய்யும் வாராந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். பெசன்ட்நகர் கடற்கரை விழிப்புணர்வு நிலையம் நிறுவப்பட்டதிலிருந்து, 5000க்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் மீதான தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் குறித்து அறிந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் புதுமை முயற்சியாக, “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 2 மின்சார கார்கள் மற்றும் 6 மின்சார இரு சக்கர வாகனங்கள் கொண்ட சென்னையில் மஞ்சப்பை படைப்பிரிவு ஒன்றும் துவக்கிவைக்கப்பட்டது. இப்படைப்பிரிவினர் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், சந்தை இடங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடை மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு மீண்டும் மஞ்சப்பை செயலி மூலம் புகாரளிப்பதில் இந்த படைப்பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இப்புகார்கள் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளால் தேவையான நடவடிக்கை எடுக்கத் தூண்டுகிறது. குறிப்பாக கடந்த மாதத்தில், மஞ்சப்பை படையினர்அளித்த தகவலின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் கடுமையான அபராதங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தின் செய்தியை விரிவுபடுத்தவும், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கடல் மாசுபாடு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் சென்னை நீலாங்கரை கடற்கரையில் மற்றொரு மஞ்சப்பை கடற்கரை விழிப்புணவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த முக்கிய தருணத்துடன் கூடுதலாக 5 மின்சார இரு சக்கர வாகனங்கள் கொண்ட மற்றொரு மஞ்சப்பை படைப்பிரிவும் தொடங்கப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது பிளாஸ்டிக்கினால் கடல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வைத் தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பொறுப்பான நுகர்வு நடைமுறைகளுக்காக வாதிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நமது பெருங்கடல்கள் மற்றும் சமூகங்களின் தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாகும். சென்னை, நீலாங்கரை கடற்கரையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிலையம் மற்றும் மீண்டும் மஞ்சப்பை படைப்பிரிவினை, தமிழ்நாடு அரசின் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களால் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா ஸாஹூ இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.