மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்:
இது குறித்து மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கடந்த 06.12.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மின் உபயோகிப்பார்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த மின் நுகர்வோர்களுக்கு அபராத தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது “. இந்த அறிவிப்பானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.