உலக முதலீட்டாளர்கள் மாநாடு திமுகவின் தேர்தல் அறிக்கை போல் இல்லாமல் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்
நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்ததற்கு பின்னரும் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டை அறியாத மக்கள் எவரும் இருக்க முடியாது. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, அதில் கவனம் செலுத்தாமல் சுய விளம்பரம் செய்வதிலேயே இரண்டரை ஆண்டுகளை கழித்திருப்பதை பொதுமக்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஜனவரி 7மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26 லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.