கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 14.01.2024 அன்று IND-TN-15 -MM-4636 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில், விசைப்படகில் சமையல் பணிக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காய்ப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த A.ஜலாலுதீன் (வயது 38) த/பெ.அபுபக்கர் என்பவர் கடந்த 21.01.2024 அன்று காலை 5.30 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள A.ஜலாலுதீன் என்பவரது குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.