91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு
ரூ.6.25 கோடி மதிப்பிலான 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகங்கள், என மொத்தம் 145 அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்களை வழங்கிடும் வகையில் 3 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகன தணிக்கை போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளை பெறவும், புதிய பகுதி அலுவலகங்களை தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் உள் (போக்குவரத்து) துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2023-2024 ஆம் ஆண்டிற்கான உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையில், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் (LMV CAR) பெற விரும்பும் பொதுமக்களில் பெரும்பாலோனார் சொந்த வாகனம் இல்லாத காரணத்தால், ஓட்டுநர் உரிமம் பெறும் பொருட்டு, ஓட்டுநர் பயிற்சி பள்ளியை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் / பகுதி அலுவலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தும் பொருட்டு, 145 அலுவலகங்களுக்கும் 145 எண்ணிக்கையிலான இலகு ரக மோட்டார் வாகனங்கள் (LMV Car) கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் நலன் கருதி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளார் (பகுதி) அலுவலகங்களை உள்ளடக்கிய மொத்தம் 145 அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 145 எண்ணிக்கையிலான இலகு ரக மோட்டார் கார் வாகனங்களை வழங்கிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் திரு.அ. சண்முகசுந்தரம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.