தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
08.01.2024 காலை 8.30 மணி முடிய தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சராசரியாக 2.15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 13.18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதிகமாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்
வ. எண். | மாவட்டம் | பதிவான மழை அளவு (செ.மீ.) |
1 | மயிலாடுதுறை | 13.18 |
2 | நாகப்பட்டினம் | 11.92 |
3 | திருவாரூர் | 10.13 |
4 | கடலூர் | 9.43 |
5 | செங்கல்பட்டு | 7.43 |
6 | விழுப்புரம் | 7.29 |
7 | அரியலூர் | 5.04 |
8 | காஞ்சிபுரம் | 4.91 |
9 | தஞ்சாவூர் | 4.17 |
10 | சென்னை | 3.92 |
11 | திருவள்ளூர் | 2.66 |
12 | கள்ளக்குறிச்சி | 2.38 |
13 | திருவண்ணாமலை | 2.01 |
14 | இராணிப்பேட்டை | 1.62 |
15 | பெரம்பலூர் | 1.21 |
அதி கனமழை (20.44 செ.மீ.-க்கு மேல்)
வ. எண். | மாவட்டம் | மழைமானி நிலையம் | பதிவான மழை அளவு (செ.மீ.) |
1 | மயிலாடுதுறை | சீர்காழி | 23.6 |
2 | கடலூர் | சிதம்பரம் | 22.9 |
3 | நாகப்பட்டினம் | வேளாங்கண்ணி | 21.6 |
4 | திருவாரூர் | திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் | 21.2 |
5 | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் | 20.6 |
மிக கனமழை (11.56 செ.மீ. முதல் 20.44 செ.மீ. வரை)
வ. எண். | மாவட்டம் | மழைமானி நிலையம் | பதிவான மழை அளவு (செ.மீ.) |
1 | மயிலாடுதுறை | அணைகாரஞ்சத்திரம் (கொள்ளிடம்) | 19.44 |
2 | கடலூர் | புவனகிரி | 18.90 |
3 | திருவாரூர் | வட்டாட்சியர் அலுவலகம், நன்னிலம் | 16.46 |
4 | கடலூர் | சேத்தியாத்தோப்பு | 15.50 |
5 | கடலூர் | அண்ணாமலை நகர் | 14.78 |
6 | நாகப்பட்டினம் | திருப்பூண்டி | 14.36 |
7 | கடலூர் | காட்டுமன்னார்கோயில் | 14.30 |
8 | கடலூர் | இந்திய வானிலை ஆய்வுத் துறை | 13.66 |
9 | திருவாரூர் | குடவாசல் | 13.44 |
10 | விழுப்புரம் | மரக்காணம் | 13.30 |
11 | கடலூர் | கொத்தவாச்சேரி | 13.00 |
12 | செங்கல்பட்டு | மாமல்லபுரம் பொதுப்பணித் துறை பயணியர் விடுதி | 12.20 |
13 | கடலூர் | லால்பேட்டை | 12.10 |
14 | விழுப்புரம் | வானூர் | 12.00 |
15 | கடலூர் | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | 11.84 |
சென்னை மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3.92 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வ. எண். | மாவட்டம் | மழைமானி நிலையம் | பதிவான மழை அளவு (செ.மீ.) |
1 | சென்னை | மண்டலம் 12 ஆலந்தூர் | 7.41 |
2 | மண்டலம் 12 மீனம்பாக்கம் | 6.95 | |
3 | மண்டலம் 01 கத்திவாக்கம் | 6.93 | |
4 | மண்டலம் 15 உத்தண்டி | 6.86 | |
5 | ஆலந்தூர் | 6.55 | |
6 | மண்டலம் 12 D156 முகலிவாக்கம் | 6.48 |
தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 07.01.2024 (இரவு 8.30 மணி) நாளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாள் | கனமழை எச்சரிக்கை – மாவட்டங்கள் |
08.01.2024 | கனமழை முதல் மிக கனமழை – செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை – விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். |
09.01.2024 | கனமழை – திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். |
10.01.2024 | கனமழை – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில்சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். |
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மீனவர்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது:-
08.01.2024 | தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். |
09.01.2024 முதல் 11.01.2023 வரை | தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். |
எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மேற்சொன்ன பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், கனமழையினை காரணமாக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆடசியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள், JCB இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய 2 வட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
- அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, பொதுமக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்ற நீர் வள ஆதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து தீர்வு காணும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (08.01.2024) மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களது ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன், இ.ஆ.ப., உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.