• Mon. Oct 20th, 2025

விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை, மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும்!. வேல்முருகன்

Byமு.மு

Feb 20, 2024
விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை, மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும்

2024-2025ஆ-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (19.02.2024) சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார்.

முக்கியமாக, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கி மகளிர் நலன், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் “மாபெரும் 7 தமிழ் கனவுகள்” என தமிழ்நாடு அரசு பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

அதில், தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கதக்கது. இதனால், குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும். சத்துக்குறைபாடும் நீங்கும்.

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதால், கடந்த ஆண்டு கல்லூரி செல்லும் பெண்களின் எண்ணிக்கை 35 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக, 2024 – 2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அரசு பள்ளிகளில் படித்த உயர்கல்விக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டம் என்ற அறிவிப்பின் மூலம், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது மூலம், தமிழ் வழியில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். தமிழ் வழியில் பயிலுவதற்கான ஆர்வத்தை மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தும்.

உயர்கல்வித்துறைக்கு கடந்த நிதிநிலை அறிக்கையை விட கூடுதலாக ரூ.1,245 கோடியும், பள்ளிக்கல்விக்கு கடந்த நிதிநிலை அறிக்கையை விட கூடுதலாக ரூ.3,743 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மாணவர்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிக்கும். இதன் மூலம், மாணவர்களின் கல்வி இடை நிற்றலை போக்கும்.

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மழை, வெள்ளத்தால், தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவான வானிலை முன்னறிவிப்புகளை பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம், 1,400 புதிய தானியங்கி மழை மானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்கள், வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றை கண்காணித்து பேரிடர் அபாய அளவை குறைக்க தொழில்நுட்ப மையம், வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் அமைப்பு ஆகிய அறிவிப்புகள் முக்கியமானவைகள்.

இந்த பூமிக்கு காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் சூழலில், கடலோர வளங்களை மீட்டெடுக்க நெய்தல் மீட்சி இயக்கம், அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த ரூ.1,675 கோடி நிதி ஒதுக்கீடு என்பவை, வரவேற்க கூடிய அறிவிப்புகள்.

குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் தமிழநாட்டில் கண்டறியப்பட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் ஒரு லட்சம் வீடுகளை ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 3.50 லட்சம் என்ற வகையில் ஒவ்வொரு வீடுகளையும் கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் மிக சிறப்பு வாய்ந்த திட்டம்.

அடுத்த இரண்டு ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களின் 5 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பாராட்டத்தக்கது.

கடந்த பத்தாண்டுகளில் எந்த முக்கியமான திட்டமும் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு தரப்படவில்லை. குறிப்பாக, ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளாகும்? இச்சூழலில், மருத்துவத் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கதக்கது.

தமிழ்நாட்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல், மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள், சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள், தமிழ்நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும்.