• Sun. Oct 19th, 2025

சட்டப் பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார்..!

Byமு.மு

Feb 15, 2024
சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (15.02.2024) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் செ. ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் : அண்மையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். நம்முடைய அரசாங்கம் மிக சிறப்பாக செயல்பட்டு இன்றைக்கு மக்கள் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறார்கள்.  இந்த அரசாங்கத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அரசு அறிவித்த நிவாரணங்களை விரைவாக அங்கு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

எங்களுடைய தொகுதி மக்களின் ஒரு நீண்ட நாள் கோரிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரத்தில், கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் இருக்கிறது. அக்கோயில் நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக திகழ்வதோடு, சித்திரை மாதத்தில்  10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் கடந்த 50 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் தேர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தேரினை சரி செய்து மீண்டும் தேரோட்டத்தை நடத்த அரசு முன்வருமா என்று பேரவை தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டு அமருகிறேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய தேர்கள் உருவாக்கும் பணிகளும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 திருக்கோயில்களின் பழுதடைந்த திருத்தேர்களை மரமாத்து செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் அவர்கள் புராதான சின்னங்களாக விளங்குகின்ற திருக்கோயில்களின் திருத்தேர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

உறுப்பினர் அவர்கள் கூறிய திருக்கோயில் சட்டப்பிரிவு 46 (i) கீழ் வருகின்ற போதிய நிதி ஆதாரம் இல்லாத திருக்கோயிலாக  இருந்தாலும், சுமார் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் உருவாக்குவதற்கு அனைத்து நிலையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. போதிய நிதியாதாரம் இல்லாததால் பொதுநல நிதியிலிருந்தும், திருக்கோயில் மற்றும் உபயதாரர் நிதியுதவி மூலம் பணிகளை மேற்கொள்ள கலந்தாய்வு செய்திருக்கிறோம்.

 உறுப்பினர் அவர்கள் மனது வைத்து, ரூ.1.16 கோடியை உபயதாரர் நிதியாக வழங்கி திருத்தேர் பணிகளை தொடங்குவதாக தெரிவித்தால் இந்த மாத இறுதிக்குள் அதற்குண்டான அனைத்து உத்தரவுகளையும் வழங்கி  உங்களோடு நானும் இணைந்து, திருத்தேர் திருப்பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்கள்: நமது தொகுதியில் அக்கோயில் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதனால் நம்முடைய அரசு முன்வந்து அதை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் தேருக்கு தேர்  கொட்டகை அமைக்க அரசு முன் வருமா என கோருகிறேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் கேட்பதற்கு முன்பாகவே, நாலு கால் பாய்ச்சலில் இந்த அரசு செல்கிறது என்பதற்கு உதாரணமாக இத்திருக்கோயிலில் திருத்தேர் கொட்டகை அமைக்கின்ற பணிக்கு ரூ.18.75 லட்சம்  மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்த 9 ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டிருகிறது.  

இந்த மாத இறுதிக்குள்ளாக  திருத்தேர் கொட்டகைப் பணியை உறுப்பினர் அவர்களே தொடங்குவதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு  அவருக்கும் அழைப்பு அனுப்பப்படும். அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வையுங்கள். ஏற்கனவே கோரிய  புதிய திருத்தேர் பணிக்கு உபயதாரர்  நிதி தருவதற்கு ஒப்புதல் தந்தால் இந்து சமய அறநிலையத்துறை மகிழ்ச்சி அடையும்.  

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 128 திருத்தேர் கொட்டகைகள் அமைப்பதற்கு சுமார் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து திருத்தேர்களை பாதுகாக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 29 திருத்தேர் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம்,  வேடந்தவாடி ஊராட்சி, ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள ஆண்டவர் பெருமாள் மற்றும் விநாயகர் அம்மன் கோயில் நிதி இல்லாமல் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்ற காரணத்தால் அம்மக்களின் கோரிக்கையை ஏற்று கிராம கோயில்கள் புனரமைப்பு நிதியிலிருந்து நிதி விடுவிக்கப்படுமா என அறிய விரும்புகிறேன்.  அதேபோல செங்கம், நீப்பத்துறையில் இருக்கின்ற பெருமாள் கோயிலில் புதிய கல்யாண மண்டபம் ஒன்று கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்குமா என அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் கூறிய விநாயகர் மற்றும் பெருமாள் திருக்கோயிலில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், கடந்த ஆட்சி காலத்தில் கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்ட நிதியுதவி எண்ணிக்கையை   தலா 1,000 லிருந்து 1,250 ஆக உயர்த்தி திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும், அத்திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.1 லட்சத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களை சாரும்.  

அதோடு மட்டுமல்லாமல் 2021 -2022 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 2,500 திருக்கோயில்களுக்கு ஒரே தவணையாக ரூ.50 கோடியை பெரும் விழாவாக நடத்தி வழங்கினார்கள். அதேபோல 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு 2,500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ரூ.50 கோடி வழங்கி, சொன்னதை செய்கின்ற முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கின்றார்.  

2023 – 2024 ஆம் நிதியாண்டிற்கான 2,500 கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் திருக்கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குண்டான  காசோலைகளும் தயார் நிலையில் இருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் அவற்றை வழங்கினால் கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 7,500 திருக்கோயில்களின் திருப்பணி நடைபெற்ற வரலாறு இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் அவர்கள் கோரியுள்ள   விநாயகர் மற்றும் அம்மன் திருக்கோயில் திருப்பணிக்கு நிதியுதவியாக ரூ.2 லட்சம் காசோலையாக வழங்கப்படும். மேலும், அவர் கோரிய பெருமாள் திருக்கோயிலில் திருமண மண்டபம் கட்டுவற்கு முதலமைச்சர் அவர்களின் அனுமதியோடு இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் அப்பணி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.