• Sun. Oct 19th, 2025

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை மாற்றம் செய்ய வேண்டும்!. ஜெயக்குமார் வலியுறுத்தல்.

Byமு.மு

Feb 24, 2024
திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை மாற்றம் செய்ய வேண்டும்

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும், வெளிமாநில அரசு ஊழியர்களையே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பதற்றமான வாக்கு சாவடிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவையும், வாக்கு எண்ணிகையும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளதாக அதிமுக கழக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் பங்கேற்று எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்து உள்ளோம் என்றார்.தேர்தல், நியாயமாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி எழுத்துப்பூர்வமான கடித்ததை கொடுத்துள்ளோம் என்றார்.

குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்யவில்லை என்றும், தகுதியுள்ள வாக்காளர் பெயர்களை சேர்க்காமலும், இறந்தவர்கள் பெயரை நீக்காமலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் மத்திய காவல் படை நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும், துணை ராணுவ படை போலீசாரை தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம் என்றார்.

சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பல வாக்குச்சாவடி மையங்கள் திமுகவினரால் கைப்பற்றப்பட்டு, கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதை நினைவுபடுத்தி தங்களது கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையர்களிடம் முன் வைத்து உள்ளோம்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சிக்கு காவல் துறையினர் துதிபாடி கொண்டிருப்பதால், அவர்களுக்கு பதிலாக துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும் என்றும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்.

பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள், தண்டனையில் இருந்து கொண்டு பிணையில் வெளியே வந்திருப்பவர்களை அவர்களை முழுமையான முறையில் கண்காணித்து நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும், தேர்தல் பார்வையாளர்களாக, வெளி மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதையும், சிசிடிவி கேமராவை பொருத்தும் பணிக்கான டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் வெளிப்படை தன்மையோடு டெண்டர் நடத்தப்பட வேண்டும் என்பதையும், திமுக-வை சார்ந்தவர்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் டெண்டர் ஒதுக்கினால் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுவதற்க்கான வாய்ப்பு இருக்காது என்பதை ஆதாரங்களுடன் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டார் .