“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, ‘எனது கிராமம்’ முன்னோடி திட்டத்தை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.1.2024) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் கலந்து கொண்டு தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அயலகத் தமிழர் தினம் 2024 விழா
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை 3-வது ஆண்டாக தொடர்ந்து அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அயல்நாடுகளில் வசிக்கும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள் மற்றும் 48 பிற மாநில தமிழ் சங்கங்களைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்றனர்.
அயலகத் தமிழர் தின விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள்
முன்னதாக, முதல் நாளான நேற்று (11.1.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். இதில், சிறப்பு நேர்வாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முதல் நாள் விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்கள் மற்றும் ஒரு கவிஅரங்கமும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தமிழின் தொன்மை – தொடர்ச்சி குறித்து துறைசார் வல்லுநர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். தொடர்ந்து, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை – தொலைநோக்குச் சிந்தனையும் செயலும் என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது.
மேலும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில் ஒளிரும் எதிர்காலம் – வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பிலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைஅமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் தலைமையில் வணிகத்தில் தமிழர்கள் – வாய்ப்பும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தல்
இரண்டாம் நாளான இன்று (12.1.2024), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்
கா. சண்முகம் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் அயலகத் தமிழ் மாணவர்கள் அனுபவங்களை பகிர்தல்
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தங்களது பண்பாட்டு சுற்றுலா சென்ற அனுபவங்களை பகிர்ந்தனர்.
சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்குதல்
இவ்விழாவில், தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்கும் விதமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து அவர்களுக்கும், தமிழ் இலக்கியப் பிரிவில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தின்னப்பன் மற்றும் அமெரிக்க நாட்டின் திருமதி வைதேகி ஹர்பேர்ட், மருத்துவப் பிரிவில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஜெயராம் லிங்கமாணிக்கர், கல்விப் பிரிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த முருகேசு பரமநாதன், சமூக மேம்பாட்டுப் பிரிவில் மலேசியா நாட்டைச் சேர்ந்த டத்தோ
எம். சரவணன், மகளிர் பிரிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த திருமதி சித்ரா மகேஷ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த
திருமதி ஜெசிலா பானு, விளையாட்டுப் பிரிவில் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ராமன் குருசாமி மற்றும் குவைத் நாட்டைச் சேர்ந்த
திருமதி சரண்யா தேவி, வணிகப் பிரிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பக்கிரிசாமி ராஜமாணிக்கம் மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த
சையது முகமது சலாவுதீன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதிற்கான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பித்தார்.
அயலகத் தமிழர் தின விழாவில் இடம்பெற்ற கண்காட்சி அரங்குகள்
அயலகத் தமிழர் தின விழாவில், தமிழர் நலன், தமிழர் கலை பண்பாடு மற்றும் வணிகம், தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி, சர்வதேச தமிழ் சங்கம் என்ற கருப்பொருள் வாரியாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழர் மரபு மற்றும் பண்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.
இதில், தமிழர் நலனை விளக்கும் விதமாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரங்குகளும், தமிழர் கலை பண்பாடு மற்றும் வணிகத்தை விளக்கும் அரங்குகளும், தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் தொல்லியல் துறை, தமிழ் இணையக் கழகம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகளும், இலங்கை தமிழ் கலை கண்காட்சி அரங்குகளும், சர்வதேச தமிழ் சங்கங்களால் அமைக்கப்பட்ட அரங்குகளும், தமிழர் மரபு மற்றும் பண்பாடுகளை விளக்கும் வகையில் இடம்பெற்றன.
இவற்றுடன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செயல்படுத்தும் “நான் முதல்வன் திட்டம்” மற்றும் சிப்காட், வழிகாட்டி நிறுவனம் (Guidance Bureau), டிட்கோ, சிட்கோ உள்ளிட்ட துறைகளின் காட்சி அரங்குகளும் இடம்பெற்றன. சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் பூம்புகார், தமிழ் வளர்ச்சித் துறை, கோ-ஆப்டெக்ஸ், அயலக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் காட்சி அரங்குகளும் இடம்பெற்றன. மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து விளக்கிட ஸ்டார்ட் அப், டிஎன் ஃபேம் ஆகியவற்றின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
செஞ்சி கே.எஸ். மஸ்தான், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மலேசியா நாட்டு சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை அமைச்சர்
எம். குலசேகரன், இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் எம். செந்தில் தொண்டமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மலேசியா நாட்டு முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம், கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, இங்கிலாந்து நாட்டின் அமஸ்பரி மேயர்
திருமதி சாருலதா மோனிகா தேவேந்திரன், ஆஸ்திரேலியா நாட்டின் ரிவர்டன் உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரவீந்திரன், டர்பன் முன்னாள் துணை மேயர் லோகி நாயுடு, Zoom Technology தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம், அயலக தமிழர் நல வாரிய தலைவர்
கார்த்திகேய சிவசேனாபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுத் துறை செயலாளர் க. நந்தகுமார், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர்
பா. கிருஷ்ணமூர்த்தி, அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.