திருப்பூர் அருகே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடந்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு வேண்டுகோள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு என்ற பத்திரிகையாளர் மீது ஆறு நபர்கள் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விளம்பர ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஏழை. எளிய, சாமானிய மக்களை, குறிப்பாக பத்திரிகையாளர்களை காக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு அவர்கள் நேற்றைய தினம் நாள் முழுவதும் மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு பின் தொடர்வதை அறிந்து அதனை உடனே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார். ஆனால் திமுக தலைமையிலான அரசின் காவல் துறையோ எந்தவித பாதுகாப்பையும் அளிக்க முன் வராமல் அலட்சியமாக இருந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதன் பின்னர் நேற்று இரவு மர்ம நபர்கள் நெருங்கிய நிலையில் நேச பிரபு பாதுகாப்பிற்காக காவல் நிலையம் நோக்கி ஓடி சென்றுள்ளார். ஆனால் காவல் நிலையம் செல்லும் வழியிலேயே மர்ம கும்பலால் பயங்கர கத்தி போன்ற ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. நேச பிரபு விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
பத்திரிகையாளர் நேச பிரபு அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லடத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக செய்தி சேகரித்து அதை வெளியிட்டிருந்ததாக தெரிய வருகிறது. ஆகவே, இதன் காரணமாக அவர் மீது இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாமோ? என்று உடன் பணியாற்றுகின்ற சக பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்தேகத்தை
எழுப்புகின்றனர். எனவே, திமுக தலைமையிலான ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள், அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஆளும் கட்சியினரின் அராஜகங்களை தைரியமாக தோலுரித்து காட்டும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. சமூக நீதி, திராவிட மாடல் என மேடைக்கு மேடை வாய்கிழிய பேசும் திமுக ஆட்சியில் இன்றைக்கு பத்திரிக்கை சுதந்திரம் எங்கே இருக்கிறது? என்பது தெரியவில்லை.
அதேபோன்று, பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வேலை செய்த சிறுமி, தான் மனிதாபிமானமற்ற வகையில் அடித்து, துன்புறுத்தப்பட்டு இருப்பதை காவல்துறையில் புகார் அளித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் குற்றம் சாட்டப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தவறு இழைத்தவர்கள் திமுக கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தயக்கம் காட்டுகிறதா? என்று தெரியவில்லை. மேலும், இன்றைக்கு தமிழக காவல்துறை செயல்படுகிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரால் தங்கள் கட்சியினர் செய்யும் அராஜக செயல்களை ஏன் தடுக்க முடியவில்லை? தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை ஏன் கட்டுப்படுத்தமுடியவில்லை? என்று தெரியவில்லை ஆனால், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றுகிறவர்களும் சுதந்திரமாக செயல்பட்டனர். அதே போன்று அம்மா ஆட்சியில் தமிழகத்தில் எங்கும் குற்றச்செயல்கள் நடைபெறாதவண்ணம் சட்டம் ஒழுங்கு சரியாக பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்று, திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும். கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பத்திரிக்கையாளர் நேச பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பினை உடனே அளிக்க வேண்டும். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொண்டு, குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.