• Sat. Oct 18th, 2025

சென்னை அருகே லேசான நில அதிர்வு!.

Byமு.மு

Mar 14, 2024
சென்னை அருகே லேசான நில அதிர்வு

சென்னை அருகே ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. 

சென்னை அருகே ரிக்டர் அளவு கோலில் 3.9 என்ற மிக லேசான அளவில் நில அதிர்வு பதிவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு சுமார் 8.43 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வின் தாக்கம் சென்னை அருகிலும் ஆந்திரா – தமிழ்நாடு எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டி பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. இதேபோல ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை சுனாமி ஆழிப்பேரலை கடந்த 2004ஆம் ஆண்டு தாக்கியது. அதில் சிக்கி நூற்றுகணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன்பிறகு நிலநடுக்கம், சுனாமி போன்ற பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் எதுவும் சென்னையையோ, தமிழ்நாட்டையோ தாக்கவில்லை, எப்போதாவது ஒரு முறை லேசான நில அதிர்வு மட்டுமே பதிவாகியுள்ளது.

கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆந்திராவுக்கு 296 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.