• Sun. Oct 19th, 2025

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Byமு.மு

Aug 27, 2024
ஆதார் அட்டை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.

ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 14ம் தேதி வரை கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும். மேலும், செப்.14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள், கட்டணம் செலுத்தி புதுப்பிக்க முடியும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.