• Fri. Apr 3rd, 2026

கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர்

Byமு.மு

Sep 20, 2024
கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர்

கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கடந்த 1 வருடமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இலங்கையிடம் இந்தியா தாரைவார்த்தது தான் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கையிலெடுத்த பாஜக கடுமையாக விமர்சித்தது. இருப்பினும் இந்த அரசியல் பிரச்சாரம் இருவழியாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் வந்து நின்றது.

இந்நிலையில், கச்சத்தீவை தரவே முடியாது என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்பு அதிபர் மாளிகையில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், “கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயார் இல்லை. இந்தியாவுக்கு எப்படி காஷ்மீரோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்படி சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்கிறதோ, அதே நிலைப்பாடுதான் கச்சத்தீவில் இலங்கையும் கடைபிடிக்கிறது.

காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என எப்படி நீங்கள் கூறுகிறீர்களோ, அதே நிலைப்பாட்டைதான் கச்சத்தீவு விஷயத்தில் நாங்கள் கொண்டுள்ளோம். கச்சத்தீவு மீட்பு, மீண்டும் இந்தியாவோடு இணையும் என்பதெல்லாம் வெறும் மீடியா ஹைப். இந்தியாவிலேயே தமிழகத்தை தவிர்த்து உ.பி. ம.பி. போன்ற பிற மாநிலங்களில் கூட கச்சத்தீவு பற்றி பேசுகிறார்களா?. கச்சத்தீவு என்பது தமிழகத்தின் ஒரு பகுதியின் பிரச்சினை மட்டுமே. என ரணில் தெரிவித்துள்ளார்.